Wednesday, March 16, 2016

கூவாத கோழிகளும் குடைசாயும் இறையாண்மையும்...!

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கோழிகளை வீடுகளில் வளர்த்ததாக மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) சிந்து வெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 ஆண்டுகளில் கோழிகள் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மண்தகடுகள் கிடைத்துள்ளன.
கூவும் அல்லது கூவாத கோழிக்கும், இறையாண்மைக்கும் என்ன தொடர்பு?
chicken_genபண்டைக்காலத்தில் அரசனின் செங்கோலும், வெண் கொற்றக்குடையுமே இறையாண்மையின் அடையாளமாக கருதப்பட்டது. தற்போது இறையாண்மை என்பது நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசுக்கு தொடர்புடையதாகவும், எதிரி நாடுகளாலோ, பயங்கரவாதிகளாலோ, (சில நேரங்களில்) அரசை விமர்சிப்பவர்களாலோ பாதிக்கப்படும் ஒரு கருத்தாக்கமாகவே நம்மில் பலரும் கருதுகிறோம். அதாவது அரசு அமைப்பினை விமர்சனமின்றி பாதுகாக்கும் ஒரு அம்சமாகவே “இறையாண்மை” நமக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாட்டின் உள்-வெளி விவகாரங்களை தீர்மானிக்கும் அதிகாரமே அரசு அமைப்புகளின் இறையாண்மை என்று அரசியல் மற்றும் சட்ட தத்துவங்கள் கூறுகின்றன. அதாவது ஒரு நாட்டு குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் எந்த அம்சம் குறித்தும் அந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க அரசே முடிவெடுக்கும் உரிமையே அந்த அரசின் இறையாண்மை என்று கொள்ளலாம். இந்த இறையாண்மை என்ற கருத்தாக்கம் சாமானிய குடிமக்களுக்கும் உண்டு என்று மனித உரிமை கருத்தியலாளர்கள் கூறுகின்றனர். இப்போது கோழிகளுக்கும், குடிமக்களின் இறையாண்மைக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்.

நம்மில் பலரும் நாட்டுக்கோழிகளை வளர்த்திருக்கவோ, அண்டை அயலார்கள் வளர்ப்பதை பார்த்திருக்கவோ கூடும். இந்தக் கோழிகளுக்கு மனித குணங்களில் பல குணங்களும் இருக்கும். குறிப்பாக தாய்க்கோழி, அதன் குஞ்சுகளை பருந்து, நாய், சில நேரங்களில் மனிதர்கள் போன்ற எதிரிகளிடம் இருந்து போராடி பாதுகாக்கும் வீரம் செறிந்த செயலை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. இந்த கோழிகள் மனிதனை அண்டியே வாழ்ந்தாலும், அவற்றுக்கான உணவினை தானே தேடி உண்ணும் இயல்புடையவை. முட்டையிடுவது முதல், அதை அடைகாத்து குஞ்சு பொரிப்பதுடன் அவற்றை பாதுகாத்து, குஞ்சுகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கும் திறன் படைத்தவை நாட்டுக்கோழிகள்.

மனிதர்களுடன் இந்தக்கோழிகள் கொண்டிருந்த உறவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதை உணர்ந்தால்தான் புரியும். கோழிகளால் பேசமுடியாது என்பதால் சொற்கள் ரீதியான உறவு சாத்தியமில்லையே தவிர நாய்கள், மாடுகளைப்போல இந்தக் கோழிகளும் மனிதர்களோடு மிகச்சிறந்த உறவைக் கொண்டிருந்தன. குஞ்சுகளோடு தாய்க்கோழி வரும் காட்சியே தாய்மை உணர்வை எளிய மொழியில் விளக்குவதாக இருக்கும். ஒரே தாய்க்கோழியின் குஞ்சுகளாக இருந்தபோதும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும் கோழிக்குஞ்சுகள் நடமாடும் குறுங்கவிதைகளாய் நமது உள்ளத்தைத் தொடும்.

இந்த கோழிகளில்தான் எத்தனை வகைகள். சாதாரண நாட்டுக்கோழிகள் தவிர கழுத்துப்பகுதியில் இறக்கைகள் இல்லாத “கிராப்” கோழிகள், காலில் கூட இறகுகள் முளைத்த, கருமையான ரத்தமும் சதையும் கொண்ட கருங்கோழிகள், பாம்பை குரலாலேயே விரட்டக்கூடிய கினிக்கோழிகள் என ஏராளமான கோழிகள். ஆனால் இவற்றில் எந்த ஒரு கோழி இனமும் மற்ற கோழி இனங்களை அழித்து விடவில்லை. ஏனெனில் இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்வகைகளுக்கும் உரிய இடமுண்டு. இதைத்தான் உயிரினப்பரவல் (Bio Diversity) என்று சொல்கிறோம்.

இந்தக்கோழிகள் நமது உணவுத்தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. இவை நமது அன்றாட வாழ்விலும் இடம் பெற்றவை. புலர்காலையில் கூவி நமது நாளை தொடங்கிவைத்ததே சேவல்கள்தான். இதனால்தான் இந்த சேவலை தமிழர்களின் இறைவனாக கருதப்படும் முருகனின் கொடியில் வைத்து அழகு பார்த்தான் தமிழன். மனிதனின் முன்னோடியான விலங்கு உணர்வுகளுக்கு தீனிபோடுவதற்காக சேவல் சண்டை என்ற சர்ச்சைக்குரிய பொழுதுபோக்கு அம்சம் உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்தது.

சங்க இலக்கியம் முதல் சமீபத்திய திரைப்பட பாடல்கள்வரை கோழிகள் குறித்து எழுதப்பட்டுள்ள இலக்கிய வரிகள் இந்தக்கோழிகள் நமது வாழ்வில் முக்கிய இடம் வகித்ததை உணர்த்தும். உணவு தானியங்களை மேய்வதற்கு வந்த கோழிகளை தனது காதுகளில் இருந்த விலை உயர்ந்த கற்கள் பதித்த தங்கத்தோடுகளை கழற்றிவீசி ஓடச்செய்த மூதாட்டியைப்பற்றி சங்க இலக்கிய பாடல் ஒன்றை படித்திருக்கலாம். இந்தப்பாடல், கோழிகள் மனித வாழ்வில் அனைத்து தளங்களிலும் இடம் பெற்றதையும், அதோடு, தமிழர்கள் தங்க ஆபரணங்களைவிட அதிக முக்கியத்துவத்தை தானியங்களுக்கு கொடுத்ததையும் உணர்த்தும்.

காலைப்பொழுதில் கோழியின் கூவல் சத்தத்தில் மக்கள் விழிப்பதை ஆன்மிகப்பாடல்களும், காதல் காவியங்களும் பதிவு செய்துள்ளன. சேர நாட்டுத்தலைநகர் வஞ்சிநகர மக்களும், சோழ நாட்டுத்தலைநகர் உறையூர் வாழ் மக்களும் சேவல் கூவி எழும்போது, பாண்டிய நாட்டு தலைநகரான மதுரை மக்கள் வேதங்கள் ஓதப்படும் ஒலியில் விழித்தெழுவதாக பெருமை பேசுகிறது கீழ்க்கண்ட பரிபாடல்.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப

ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

பரிபாடல்-திரட்டு 8:7-12

காதல் காவியங்களிலும் கோழிகளுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உதாரணத்திற்கு எளிய குறுந்தொகை பாடல் ஒன்றைப் பார்க்கலாம்:

'குக்கூ' என்றது கோழி. அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்.

தோள் தோய்க் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால்

- அள்ளூர் நன்முல்லை

அதிகாலையில் கோழியின் குரலைக் கேட்டதும் விழித்துக்கொண்ட தலைவி பொழுது விடிந்துவிட்டதே என்று வருத்தப்படுகிறாள். வைகறைப் பொழுது தன்னையும் தன் கணவனையும் பிரிக்கும் வாள்போல் வருகிறது என்று தனது துயரத்தை காவிய நயத்தோடு தலைவி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்தப்பாடல்.

இதேபோல சித்தமருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் கோழிக்கும், கோழி முட்டைக்கும் உள்ள மருத்துவ குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

கோழிக்கறி நெருப்பாங் கொள்ளின் மருந்துரம்வால்

கூழைக்கடுப்பு மந்தங் கூரரச மகிழ்ப்பேர்

நீலுற்ற போக நிலக்கிரந்தி பித்தழ ளந்தான்

தூளித்த மெய்யிழைக்குஞ் சொல்.

(கோழிக்கறியானது அதை உட்கொள்வோருக்கு உடல்சூட்டைக் கொடுக்கும். மந்தத்தைப் போக்கும். உடல் இளைக்கச் செய்யும். போகம் விளைவிக்கும்)

வாதபித்தஞ் சேர்ப்பிக்கும் வன்றோடம் புண்போக்குங்

தாதுவை மெத்த தலைப்பிக்கும் – மோது

கபத்தை அடக்குங் கரப்பான் உண்டாக்கும்

விபத்தையுறுங் கோழிமுட்டை எண்.

(கோழி முட்டையை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண் ஆறும். கபம் கோழையை அகற்றும். கரப்பான் உண்டாக்கும். வாதம், பித்தம் உடலில் அதிகரிக்கும்)

இவ்வாறு சாமானியர்களின் உணவாகவும், மருந்தாகவும் மட்டுமல்லாமல் செல்வமாகவும், வளமாகவும்கூட இந்தக்கோழிகள் பார்க்கப்பட்டன.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானவை இந்த கோழிகள் மீதான இறையாண்மை. எந்த வகைக்கோழிகளை வளர்ப்பது, எத்தனை அளவில் வளர்ப்பது, என்ன தீவனம் கொடுத்து எங்கே வளர்ப்பது போன்ற அம்சங்களில் முடிவெடுக்கும் உரிமை மக்களிடமே இருந்தது. இதையே இறையாண்மை என்று கூறுகிறோம். கோழிகளை விவசாயிகள் மட்டுமே வளர்க்கவில்லை. எந்தத் தொழில் செய்பவரும், இல்லத்தரசிகளும், சிறுவர்களும்கூட வளர்க்கும் விதத்திலேயே கோழி வளர்ப்பு இருந்தது. வசிக்கும் இடத்திற்கேற்ப கூடு அமைத்து கோழி வளர்க்கும் வசதியும், வாய்ப்பும் இருந்தது. கோழிகளோ, முட்டைகளோ எளிதில் கிடைப்பதாக இருந்தது. பஞ்சாரம் என்ற பெயரில் மூங்கிலால் அல்லது இரும்பு கம்பிகளால் ஆன கூம்பு வடிவக்கூடைகள் கோழிகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டன.

ஆனால் பசுமைப்புரட்சியின் உடன்பிறப்பாக வந்த வெண்மைப்புரட்சியின் விளைவாக வீரிய ரக கால்நடைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. கூடுதல் பாலுக்காக ஜெர்சி போன்ற உயர் இன(!) பசுக்களோடு, எந்தத்தேவையும் இன்றியே அதிஉயர்(!) இன கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் புறக்கணித்துவிட்டு யாராலும் வாழமுடியாது. ஆனால் அந்த அறிவியலும், தொழில்நுட்பமும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; யாருடைய நலன்களுக்காக பயன்பட வேண்டும் என்ற அம்சங்கள் தீவிர பரிசீலனைக்கு உரியவை. அறம் சாரா அறிவியலோ, தொழில்நுட்பமோ மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.

அறிவியலின் வளர்ச்சி, உயர்-உயிரி தொழில்நுட்பம் என்ற பெயரில் பிராய்லர் மற்றும் லேயர் என்ற கறிக்கோழிகளும், முட்டைக்கோழிகளும் அறிமுகப் படுத்தப்பட்டன. குஞ்சு பொரித்து 40-50 நாட்களிலேயே இறைச்சிக்கு தயாராகும் பிராய்லர் கோழிகளும், குஞ்சு பொரித்து 6 மாதங்களில் முட்டையிடத் தொடங்கி ஓராண்டுக்குள் சுமார் 250 முட்டைகளை இடும் லேயர் கோழிகளும் பரவலாக விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.

தாய்க்கோழியின் அடைகாப்பில் பொரிப்பதற்கு பதிலாக இன்குபேட்டர் எந்திரங்களின் செயற்கை அடைகாப்பில் பொரிக்கும் இந்தக்கோழி குஞ்சுகளுக்கு தாய்க்கோழிகளையே தெரியாது. கோழிக்கான எந்த உணர்வுகளும் இந்த கோழிக்கு இருக்காது. எனவே இந்த குஞ்சுகள் முட்டையிடும் அல்லது கறிக்கோழியாக உருமாறும் உயிருள்ள எந்திரங்களாகவே வளர்கின்றன.

முன்னர் பல்வேறு வண்ணங்களில் இருந்து வந்த கோழிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக வெள்ளை வண்ணத்திற்கு மாறின. பண்ணைகளுக்கு வரும் பிராய்லர் கோழிகள் முட்டையிடுவதை மறந்திருந்தன. 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருந்த கோழிகள், அவை உட்கொள்ளும் உணவை இறைச்சியாக மாற்றாமல் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தின. மேலும் கொழுப்பு அடைத்து மரணத்தை தழுவின. எனவே இந்தக் கோழிகளை சுமார் 55 நாட்களுக்குள், உரிய விலை கிடைக்காவிட்டாலும் விற்றுத்தீர்த்துவிட வேண்டிய கட்டாய சூழலுக்கு கோழிப் பண்ணையாளர்கள் உள்ளானார்கள்.

லேயர் என்ற முட்டைக்கோழிகளோ, தாம் முட்டையிட சேவல் தேவையில்லை என்ற உயிரியல் உண்மையை உணர்த்தின. ஆனால் அதன் விளைவாக அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது என்ற உண்மையும் தெரியவந்தது. அப்போதுதான் அடுத்த முறையும் கோழிக்கு குஞ்சு பொரிப்பகங்களைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற உண்மை கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.

இதைவிட முக்கியமாக இந்தக்கோழிகளுக்கு, பழைய நாட்டுக்கோழிகளைப்போல தீனியைத் தேடும் திறன் கிடையாது. கோழி நிறுவன அதிபர்களும், அரசு அதிகாரிகளும் பரிந்துரை செய்த கோழித்தீவனங்களே இந்தப் பண்ணைக்கோழிகளின் முழுமுதல் உணவானது. இந்த தீவனங்களில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதுகூட பல பண்ணையாளர்களுக்குத் தெரியாது.

இவை, கோழியின் உருவத்தில் உள்ள ஒரு “ஜந்து”வே தவிர, இவற்றை முழுமையான கோழி என ஏற்கமுடியாது. ஏனெனில் இந்தக்கோழிக்கு பறக்கத்தெரியாது. குஞ்சுகளை காப்பாற்றத்தெரியாது. விடியலில் கூவத்தெரியாது. அதற்கான உணவை தேடிப்பெறத் தெரியாது. குஞ்சு பொரித்த நாளிலிருந்து கூண்டிலோ, மிகக்குறைவான இடவசதி கொண்ட பண்ணைகளிலோ வளர்க்கப்படுவதால் இந்தக் கோழிகளுக்கு நடக்கவும், ஓடவும்கூட தெரியுமா? என்பதே கேள்விக்குறிதான். இந்தக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு என்பது உலகறிந்த உண்மை. இந்தக்கோழிகளுக்கு வழங்கப்படும் உணவில் என்ன பொருட்கள் கலந்திருக்கின்றன? இந்த உணவைத் தின்று வளரும் கோழிகளையோ, அவை இடும் முட்டைகளையோ உட்கொள்ளும் நமக்கு என்ன பிரசினைகள் வரும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

இந்நிலையில் கோழிகளை இறைச்சிக்காக சுத்தம் செய்ய வசதியாக சிறகுகளே இல்லாத கோழிகள் மரபணு மாற்றத்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அடுத்தக்கட்டமாக பறக்கத்தேவையில்லாத கோழிக்கு இறக்கை எதற்கு என்ற நோக்கில் இறக்கை இல்லாமல், கூண்டில் அல்லது கடையில் அடுக்கிவைப்பதற்கு வசதியாக சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோகூட கோழிகள் அறிமுகமாகலாம். இந்த புதிய இனங்கள், இவற்றை உட்கொள்ளும் மனிதர்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது.

இதேபோல இந்தக்கோழிகளில் எத்தனைக் கோழிகளை வளர்ப்பது என்று முடிவெடுப்பதிலும் சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப்பங்கும் இருப்பதில்லை. அதை குஞ்சுப் பொரிப்பகங்களை நடத்தும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்தக்கோழிகளுக்கு என்ன தீவனம் இடுவது, என்ன மருந்துகளை கொடுப்பது என்பதை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. ஆக நமது கண் எதிரிலேயே நமக்கு அறிமுகமான நாட்டுக்கோழி என்ற நமது பாரம்பரிய கோழி இனங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன. அதற்கு பதிலாக கோழி உருவம் தாங்கிய ஏதோ ஒன்று கோழி என்ற பெயரில் நம்மிடம் திணிக்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் வாழும் இளைய தலைமுறைக்கு கோழிகள் முட்டை இடும் என்றோ, இந்த முட்டையிலிருந்துதான் கோழிகள் உருவாகின்றன என்பதோ தெரியாமல் போகலாம். இந்த கோழிகளும், முட்டைகளும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக அவர்கள் எண்ணும் வாய்ப்பும் உள்ளது. கோழியின் பிற குணாதிசயங்களோ, உயிர்ச்சூழலோ அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே போய்விடக்கூடிய வாய்ப்புள்ளது.

பசுமைப்புரட்சியின் உடன்பிறவா சகோதர உறவான வெண்மைப்புரட்சியின் நிலை இதுவென்றால், தற்போது அமல்படுத்தப்படும் “என்றென்றும் பசுமைப்புரட்சி” (Evergreen Revolution) மீதமுள்ள இறையாண்மையையும் பலியாக கேட்கிறது. நேற்று கோழிகளுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை இன்று அரிசி முதலான உணவு தானியங்களுக்கும், ஏனைய காய்கறிகளுக்கும் நிகழ்கிறது. இது எவ்வாறெனில் இந்திய வேளாண்மையில் மரபணு மாற்றம் என்ற தொழில்நுட்பம் வெகு விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது, அது மனித குலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் இல்லாமலேயே.

மரபணு மாற்றம் என்ற பெயரில் தாவர மரபணுக்களை, விலங்குகளின் மரபணுக்களோடு இணைத்து பல விபரீத சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் வெற்றி அடையும் மரபணுக்கள் அறிவுச்சொத்துரிமை சட்டங்களின்படி காப்புரிமையும் பெற்று வருகின்றன. தற்போதைய இந்திய சட்டப்படி விதைகளுக்கு காப்புரிமை பெற முடியாது என்று கூறப்பட்டாலும், மரபணுவுக்கு பெறப்பட்ட காப்புரிமை மூலமாக விதை மீதான கட்டுப்பாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள் பெற்று வருகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையான மரபணுவை உடைய தானிய வகைகள் பயிரிடப்பட்டால் அப்பகுதியில் உள்ள அனைத்து விளை நிலங்களிலும், மரபணுமாற்ற தாக்கங்கள் காற்று மூலமாக பரவி விடும். அப்போது இயற்கை விவசாயிகள், பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தான மரபணுக்கூறுகளை தம்முடைய நிலத்தில் பதுக்கி வைத்த குற்றத்திற்காக தண்டனை பெறுவார்கள்.

இந்தப்போக்கு கோழி விவகாரத்தில் நாம் பார்த்ததைப்போல நம் விவசாயிகளின் இறையாண்மையை பலியாக கேட்கும் ஒரு யுக்தியாகும். இதை அனுமதித்தால் நம் நாட்டில் நெல்லை விளைவிப்பதா? அல்லது குதிரைகள் சாப்பிடும் கொள்ளுப் பயிரை விளைவிப்பதா? என்பதை விவசாயிகளோ, அரசோ தீர்மானிக்க முடியாது. அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் விதைகளை கட்டுப்படுத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களே அவற்றை தீர்மானிக்கும்.

மரபணு மாற்று விதைகளை விற்கும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்கின்றன. எனவே மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது மருந்துகள் விற்பனையை பெருக்கும் நோக்கில், நோயை அதிகரிக்கும் ஒரு விற்பனைத் தந்திரமாகமாகவும் இருக்கக்கூடும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலோ, இங்குள்ள அரசுகளை தீவிரமாக விமரிசனம் செய்தாலோ இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்திய அரசோ, சட்டப்பூர்வமாகவே அரசின் இறையாண்மையையும், குடிமக்களின் இறையாண்மையையும் தள்ளுபடி விலையில் விற்றுக்கொண்டிருக்கிறது.

இறையாண்மை என்பது அரசு அமைப்புகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; அது சாமானிய குடிமக்களுக்கும் சொந்தமானது என்று நவீன மனித உரிமை தத்துவங்கள் கூறுகின்றன. மக்களின் இறையாண்மையை பாதுகாக்க அரசு தவறும்போது, அதை பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது. அந்த இறையாண்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி. இதற்கான பதிலை அரசியல்வாதிகளிடமும், அறிவியல் அறிஞர்களிடமும் கேட்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து விட்டோம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே இப்போதைக்கு முக்கியமானது.

நாட்டுக்கோழி வளர்ப்பு முறை

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 500 கோழிகள் வளர்க்கலாம். கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற 


கோழிகளுக்குத்தான் நோய் வராது. கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்... பாம்புகள் நடமாட்டம் இருந்தால் பண்ணை முறை என்றால் பண்ணையை சுற்றி ஒரு அடி உயரம் மீன் வலைகளை கட்டலாம்.. பண்ணையை சுற்றி சிறியாநங்கை வளர்க்கலாம்.. மேலும் கோழி வளர்க்கும் இடத்தில் வான்கோழி மற்றும் கின்னிக்கோழி ஒன்று அல்லது இரண்டு வளர்க்கலாம்.. கோழி வகைகளில் வான்கோழியும், கின்னிக்கோழியும் மட்டும் சற்று வித்தியாசமானவை..பொதுவாக கின்னிக்கோழியை வளர்ப்பதற்கு தனித்திறமையே வேண்டும் என்பார்கள். ஏனெனில் கின்னிக்கோழிகளின் முழுநேர வேலையே இரையை அரைத்துக் கொண்டு இருப்பது தான் ஆனால் அதேநேரத்தில் கின்னிக்கோழிகள் வளர்க்கப்படும் இடத்தில் காட்டுப்பகுதியாக இருந்தாலும் மனிதர்கள் தைரியமாக நடமாட முடியும் மற்றும் வாழவும் முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் நாயின் செய்கைகளில் ஒருசில குணங்கள் கின்னிக்கோழிகளிடம் உண்டு .. இவற்றில் முக்கியமான ஒன்று கின்னிக்கோழிகள் வளரும் வீட்டிற்கு அருகில் விஷம் கொண்ட பாம்புகள் உள்பட விஷஜந்துகள் எதுவந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு எஜமானர்களுக்கு எச்சரிக்கை மணியாக கத்திக்கொண்டே இருக்கும். இதுமட்டுமின்றி வீட்டில் பழகிய நபர்களை தவிர வேறுயாராவது புதிய மனிதர்கள் வந்தாலும் கூட கின்னிக்கோழிகள் தங்களது கடமையை செய்ய தவறுவதில்லை...இது எழுப்பும் வித்தியாசமான சத்தத்தால் ஒருவிதமான அலைகள் உருவாகின்றன.. இதனால் அந்தபக்கம் பாம்புகள் வருவதில்லை..முயற்சி செய்து பார்க்கவும்...நன்றி.. வாழ்த்துக்கள்.....

நாட்டு கோழி வளருங்க ... நச்சுன்னு லாபம் பெறுங்க...

‘ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.

பராமரிப்பு முறைகள்

பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.

48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?


அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.

குஞ்சு பொரிப்பு

பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.

கட்டமைப்பு

ஆயிரம் கோழி வளர்க்க ஆயிரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயிரம், தீவன பக்கெட் மற்றும் தண்ணீர் பக்கெட் 10க்கு ரூ.1000. குஞ்சுகள் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, புதூர், சாலைப்புதூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. இன்குபேட்டர் மற்றும் கேட்சர் மெஷின் ஐதராபாத்திலும், பண்ணை மற்றும் தீவனப்பொருள்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வாங்கலாம்.

முதலீடு

ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.

வருமானம்

ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

சந்தை வாய்ப்பு

இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.


Regards,
Manivannan P
7373361387

நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு




சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் பார்ப்பதற்கு நாட்டுக் கோழி போன்றே காணப்படும். ஆனால் இவற்றுக்கு நாட்டுக் கோழிகளை விட பல சிறப்பான இயல்புகள் உண்டு. குறிப்பாக இந்த வகை கோழிகளுக்கு கரையான்களை உணவாக பயன்படுத்துவதன் மூலம் இவை எளிதில் அதிக புரதச்சத்தை பெற்று வேகமாக எடை அதிகரிக்கும். இந்த கோழிகளை புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை பெறலாம்.
சிறப்பு அம்சங்கள்
வண்ணக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் முன்பு அவற்றின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வது நல்லது.
1. நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும்.
2. நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையை விட அதிக சுவையுள்ளது.
3. எல்லா இடங்களிலும், எல்லா தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.
4. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
5. அதி நவீன வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி வளர்க்க தேவையில்லை. சாதாரண நாட்டுக் கோழி போல் புறக்கடை வளர்ப்பாக வளர்க்க முடியும்.
6. நாட்டுக் கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.
கரையான் உணவு
கரையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தீவனச் செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, இற்றுப் போன மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண்பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.
உற்பத்தி ஆவதில்லை
கரையான்களில் உற்பத்தியானது அடைமழைக் காலங்களில் மட்டும் பாதிக்கப்படுவதுண்டு. இது தவிர பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் கரையான்கள் உற்பத்தி ஆவது இல்லை. இது தவிர, எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கரையான்கள் உற்பத்தியாகாது. எனவே, கரையான்களை உற்பத்தி செய்ய முற்படும் போது இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும்.
தீவனங்கள்
வண்ணக் கோழிகளுக்கு கரையான்களை தவிர வழக்கமான தீவனங்களை அளித்து வளர்க்கலாம். கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங் கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாதுப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.
இவை தவிர வேலிமசால், குதிரைமசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. ஒரு தடவை நட்டால் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து இவற்றை அறுவடை செய்து பசுந்தீவனம் தயாரிக்கலாம்.
நோய்கள் பராமரிப்பு
வண்ணக் கோழிகளை வளர்க்க முற்படும் போது அவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த குஞ்சுகளுக்கு பிறந்த 6 வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12 வது நாள் கம்போரா தடுப்பூசி, 27 ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் இராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை இராணிகெட் கே தடுப்பூசி அளிக்க வேண்டும்.
ஒப்பீடு
வண்ணக் கோழிகளை நாட்டுக் கோழிகளுடன் ஒப்பிடும் போது வண்ணக் கோழியே பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. வண்ணக் கோழிகள் நாட்டுக் கோழிகளை விட வேகமாக உடல் எடை அதிகரிக்கிறது. அதாவது நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே உடலின் எடை கூடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல் நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 70 முட்டைகள் வரை இடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது. மேலும் நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது. ஆனால் வண்ணக் கோழிகளின் முட்டையின் எடையானது 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. இது போல் பலவிதங்களில் ஒப்பீடு செய்து பார்த்த நிலையில் வண்ணக் கோழிகள் முதலிடத்தை பெறுகின்றன. எனவே, நாட்டுக் கோழி வளர்ப்பில் இறங்க விரும்புபவர்கள் பண்ணையின் ஒரு பகுதியாக வண்ணக் கோழிகளையும் சோதனை அடிப்படையில் வளர்த்து பின்னர் பெரிய அளவில் இதே கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.

Regards,
Manivannan P
7373361387

வளம் தரும் வனராஜா, கிராமப்பிரியா கோழிகள்

பண்டைக் காலம் தொட்டு வீட்டுக் கால்நடை வளர்ப்பில் முக்கியமானதாக இருப்பது கோழி வளர்ப்பு. மண்ணைக் கொத்தி வளமாக்குவதிலிருந்து, உணவுத் தட்டில் விருந்தாவதுவரை கோழியின் பயன்பாடு அதிகம்.
தற்போது கிராம மக்களிடையே கோழி வளர்க்கும் ஆர்வம் குறைந்துள்ளது. இதன் பலனாக முட்டை, கோழி இறைச்சி உண்பது குறைந்து கிராமப்புறங்களில் புரதச்சத்து குறைபாடும் அதிகரித்துவருகிறது.
கோழிகள் மூலம் வருமானமும், சத்துள்ள உணவுப் பொருட்களும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் வனராஜா, கிராமப்பிரியா என்ற கோழி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது கொல்லைப்புறக் கோழி வளர்ப்பில் ஒரு புதிய மாற்றத்தையும், கிராமவாசிகளுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அறிமுகம்
தரமான இறைச்சி, முட்டைகளைத் தரக்கூடிய வனராஜா, கிராமப்பிரியா கோழி இனங்களை ஹைதராபாத்தில் உள்ள கோழி திட்ட இயக்குநரகம் சமீபத்தில் உருவாக்கியது.
நாட்டுக் கோழிகளைப் போன்ற அனைத்து அம்சங்களுடனும், ஆனால் அவற்றைவிட கூடுதலாக முட்டையிடும் திறன், இறைச்சியைக் கொடுக்கக்கூடிய இந்தக் கோழிகள் விரைவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கோழி விதைத் திட்டம் மூலம் அறிமுகமாக உள்ள இந்தக் கோழிகளை, ஒரு சில மாதங்களில் அனைவரும் பெறலாம் எனக் கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக் கோழிகளுக்கு உள்ளதைப் போலக் கொல்லைப்புறங்களையே தீவன இடமாக மாற்றி, இந்தக் கோழிகளை வளர்க்கலாம். இதன் மூலம் குறைந்த செலவில் கிராமவாசிகளுக்கு வரப்பிரசாதமாக இத்திட்டம் இருக்கும்.
நல்ல லாபம்
கோழி விதை திட்ட ஆராய்ச்சியாளரும், கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியருமான க. சிவக்குமார் கூறியதாவது:
புறக்கடையில் வளர்ப்பதற்கு என்றே உருவாக்கப்பட்டவை வனராஜா, கிராமப்பிரியா கோழிகள். இவை இரண்டுமே நாட்டுக் கோழிகளைப் போன்ற தோற்றம், உடல் வாகு, நோய் எதிர்ப்பு திறன், பழுப்பு நிற முட்டை, அதிக முட்டையிடும் திறன் கொண்டவை.
திட்டம் அறிமுகமானதும் முன்பே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்குக் குஞ்சுகளாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களில் பதிவு செய்து கோழிக் குஞ்சுகளைப் பெற முடியும். கடந்த ஒரு மாதமாகக் கோழிக் குஞ்சுகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஆரோக்கிய உணவு
வனராஜா கோழிகள் ஒன்றரை வருடத்தில் 110 முட்டைகள்வரை இடும். கிராமப்பிரியா கோழி ஒன்றரை வருடத்தில் 200 முதல் 230 முட்டைகள்வரை இடக்கூடியது. அதேபோல இவை 6 மாதங்களில் சராசரியாக 2 கிலோ எடையைப் பெற்றுவிடுகின்றன. நல்ல, திடகாத்திரமான கோழிகள் விரைவில் இறைச்சிக்குத் தயாராகிவிடும்.
விவசாயிகள் மத்தியில் இந்தக் கோழி ரகங்கள் குறித்துப் புதிய இலக்கை நிர்ணயித்து, கடந்த ஒரு மாதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பதிவு செய்வது முடிந்தவுடன் கோழி வளர்ப்பு குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். கிராமங்களில் 10 முதல் 20 கோழிகளை வளர்க்கும்போது அதிக முட்டையும், இறைச்சியும் கிடைக்கும். அதை விற்றால் நல்ல லாபமும், ஆரோக்கியமான உணவும் கிடைக்கும் என்றார்.
ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் கோழி வளர்ப்பும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது


Regards

Manivannan P
7373361387

நாட்டுக் கோழி வளர்ப்பு


வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன.
மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது.
குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும்.

நாட்டுக் கோழிகளின் வகைகள்

  • கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாது போனாலும் அதன் வண்ணங்களை வைத்தே அடையாளம் காண முடியும்.

இனப் பெருக்கம்

  • நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.

முட்டையிடுதல்

  • முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சத்தத்தை  எழுப்பும். அதை கேவுதல் என கூறுவர்.
  • கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.
  • ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.

அடை கட்டுதல்

  • நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.
  • அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.
  • கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.
  • அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சு பொரிக்கும்.

பராமரிப்பு

  • நாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.

தீவனம்

  • ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.

நோய்த் தடுப்பு

  • நாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.
  • தடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. இந்த முறையில் நாட்டுக் கோழிகளைப் பராமரித்தால் வீட்டில் இருந்தபடியே முட்டைகளை சந்தைப்படுத்தியும், கோழிகளை விற்றும் பயன்பெறலாம்

சேவல்

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/60/Rooster_portrait2.jpg/400px-Rooster_portrait2.jpg

சேவல் என்பது கோழி போன்ற ஒரு சில கோழியினத்தின் ஆணினத்தை குறிப்பதாகும். இவை பொதுவாக இறைச்சிக்காகவே வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. கோழி என்பது ஆண் பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயராகும்.
சேவலை அடையாளப்படுத்துவது அதனுடைய கொண்டையாகும். அதேவேளை சேவல் கூவும் ஆற்றல் கொண்டது.